கோவை: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று (ஏப்.30) ஒரே நாளில் 60 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் விற்பனை குறைந்துள்ளதாகவும் தொழில் துறையினர் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக அந்நாளில் வழக்கத்தை விட அதிகளவு நகை விற்பனை காணப்படும். வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையிலும் கோவையில் இன்று தங்க நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் ராஜவீதி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க நகை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இதுகுறித்து காந்திபுரம் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற வாடிக்கையாளர் கூறும்போது, “நம் கையில் பணத்தை வைத்திருந்தால் அதன் மதிப்பு குறைந்து வரும். ஆனால் தங்கத்தில் முதலீடு செய்வதால் அதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து எதிர்காலத்தில் நல்ல பயன் தரும். இதனால் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து தங்கம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன்,” என்றார்.
பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கீதா ராணி என்ற வாடிக்கையாளர் கூறும் போது, “அட்சய திருதியை ஆண்டுதோறும் வந்து கொண்டு தான் உள்ளது. தங்கத்தின் விலை மட்டுமல்ல அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து கொண்டே தான் வருகிறது. இருப்பினும் தங்கம் வாங்குவதை தொடர்கிறோம். கடந்த ஆண்டு வாங்கிய அளவை விட இவ்வாண்டு குறைவாக வாங்கியுள்ளோம்,” என்றார்.
கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறும்போது, “தங்கத்தின் விலை உயர்வு அட்சய திருதியை மொத்த விற்பனையில் இவ்வாண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு 100 கிலோ அளவு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இவ்வாண்டு 60 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது. ஆரம், நெக்லஸ் போன்ற நகைகளை தவிர்த்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஒரு கிராம் தங்க நாணயம், மோதிரம், தோடு போன்ற சிறிய நகைகளை வாங்கி சென்றனர்,” என்றார்.