மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு தின திருவிழாவுக்காக இன்று கொடியேற்றம் நடைபெற உள்ளது.
தமிழக எல்லையான குமுளி அருகே விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலுக்கு தமிழகம், கேரளா வழியே செல்ல இரண்டு தனித்தனி பாதைகள் உள்ளன.
லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கிமீ. தூர வனப்பாதையில் நடந்து செல்லலாம். இதே போல் குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கிமீ. தூரத்தில் ஜீப்பிலும் செல்லலாம்.
வனப்பகுதியில் அமைந்துள்ள கோயில் என்பதால் சித்திரை மாத முழுநிலவன்று ஒருநாள் மட்டும் இங்கு திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா மே 12-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான கொடியேற்றம் இன்று (செவ்வாய்) பளியன்குடியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ஆகவே நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், விரதம் ஏற்பவர்கள் மாலை அணிந்து அன்று விரதத்தை தொடங்கலாம் என்று மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.