புதுடெல்லி: இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இம்முறை டி20 வடிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் செப்டம்பர் 10-ல் மோதுகிறது. 14ம் தேதி பாகிஸ்தானுடனும், 19ம் தேதி ஓமனையும் எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.
இதனிடையே கடந்த ஏப்ரலில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதலை நடத்தியது. இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்டில் இந்திய அணி பங்கேற்பதில்லை என்ற முடிவு கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இது மேலும் தீவிரமாகியுள்ளது.
இதனால் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தற்போது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் இடையே நேரடியாக எந்த கிரிக்கெட் தொடரும் நடைபெறாது.
அதேவேளையில் அடுத்த மாதம் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும். அந்தப் போட்டியில் இந்தியா, பங்கேற்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு சென்று எந்தவிதப் போட்டியிலும் பங்கேற்காது.
பாகிஸ்தானில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்பது இந்தியாவின் அணுகுமுறையாகும். பாகிஸ்தானில் நடைபெறும் எந்தவிதமான விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய அணிகள் பங்கேற்காது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடத்தத் திட்டமிடப்பட்டாலும் அதற்கு அனுமதி கிடையாது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பது பல்வேறு நாடுகள் விளையாடும் தொடராகும். எனவே, இதில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கப் போவதை நாங்கள் தடுக்கப் போவதில்லை.
பல்வேறு நாடுகள் பங்கேற்கும் போட்டியில் இந்திய அணி பங்கேற்கலாம். அதேநேரத்தில் அந்தப் போட்டியை பாகிஸ்தான் நடத்தினால், அதில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக விவாதிக்கப்படும். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள பதற்றம் தணிந்தால் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் நடத்தப்படுமா என்பது தெரியவில்லை. தற்போதைய நிலையில் அது சாத்தியமில்லை.
சர்வதேச போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு அணிகளும், தனிப்பட்ட வீரர்களும் பங்கேற்கலாம். அந்தப் போட்டிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த அணிகள் அல்லது வீரர்களும் கலந்துகொண்டு விளையாடலாம். அதேபோல், இந்தியா நடத்தும் இது போன்ற பல்வேறு நாட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களும் அணிகளும் பங்கேற்க முடியும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.