வாஷிங்டன்: அமெரிக்காவின் ரோட் தீவில் பிறந்தவர் பிராங்க் கேப்ரியோ. பின்னர் படிப்பு முடித்து கடந்த 40 ஆண்டுகளாக ரோட் தீவின் முனிசிபல் நீதிபதியாக பணியாற்றினார். பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி வந்தார்.
ஒரு கட்டத்தில் இவரது அணுகுமுறை அனைவரையும் கவர்ந்தது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். அப்போது அவர்களிடம் நீதிபதி பிராங்க் கேப்ரியோ விசாரணை நடத்தும் விதமே தனித்துவமாக இருக்கும்.
நீதிமன்ற அறையில் குற்றவாளியாக நிற்கும் உணர்வு மக்களுக்கு ஏற்படாது. நண்பரிடம் பேசும் உணர்வே அங்கு மேலோங்கி இருக்கும். போக்குவரத்து விதிமீறல் குற்றத்துக்கு ஆதாரமாக வீடியோ காட்சிகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு போட்டு காட்டுவார்கள். அதை பார்த்து ஆமாம், தவறு செய்துவிட்டேன் என்று சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அவர்களுடைய பின்புலம், எந்தச் சூழ்நிலையில் அவர்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டார் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு பல வழக்குகளை தள்ளுபடி செய்வார்.
நீதிபதி கேப்ரியோ பல சந்தர்ப்பங்களில் அபராதம் விதித்துள்ளார். அந்தத் தொகையை கூட நன்கொடையாளர்களிடம் பெற்ற பணத்தை ஈடுகட்டி தீர்ப்பளிப்பார். இவரது நீதிமன்ற விசாரணைகள், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகம் முழுவதும் பிரபலமாயின. ‘Caught in Providence’ என்ற பெயரில் நீதிமன்ற விசாரணைகள் ஒளிபரப்பாயின. கேப்ரியோவின் நீதிமன்ற விசாரணைகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. உலகிலேயே மிகக் கனிவான நீதிபதி என்று பாராட்டுகளைப் பெற்றார்.
இந்நிலையில், தனக்கு கணையப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக நீதிபதி பிராங்க் கேப்ரியோ கடந்த 2023-ம் ஆண்டு தெரிவித்தார். அந்த செய்தியை கேட்டு கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார். அவருக்கு வயது 88.
இதுகுறித்து பிராங்க் கேப்ரியோவின் மகன் டேவிட் கேப்ரியோ அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தனது தந்தைக்கு ஆதரவும், பாராட்டும் வழங்கிய அனைவரும் அவரது நினைவாக கருணையை சிறிதளவேனும் உலகில் பரப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.