பாட்னா: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்தும், 2024 மக்களவைத் தேர்தலில் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டுகள் குறித்தும் தேர்தல் ஆணையம் முழுமையாக விசாரித்து பொதுமக்களுக்கு தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கோரிக்கை விடுத்தார்.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு விவகாரத்தை முன்வைத்து இன்று நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி உட்பட இண்டியா கூட்டணி எம்.பிக்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், “அனைத்து எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தங்கள் குற்றச்சாட்டுகளை உண்மைகளுடன் பகிரங்கமாக முன்வைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் இதுபற்றி விசாரித்து பொதுமக்களுக்கு தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்.
பிஹாரின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பற்றிய எங்கள் கருத்து என்னவென்றால், தேர்தல் ஆணையம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு செயல்முறையை மேற்கொள்கிறது. அவர்கள் ஏன் இதனை செய்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும். வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் இருந்து ஊடுருவல் காரர்கள் நுழைந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் தங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதிலும், ஊடுருவல்காரர்கள் நுழைந்து வாக்களிக்கும் உரிமையைப் பெற்றதாக உள்துறை அமைச்சர் கூறுகிறாரா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.