அனிமேஷன் திரைப்படமான ‘மகா அவதார் நரசிம்மா’ உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’, ‘காந்தாரா’ போன்ற பான் இந்தியா படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மகா அவதார் நரசிம்மா’. அனிமேஷன் திரைப்படமான இதை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். கடந்த ஜூலை 25 வெளியான இந்த படம் இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பொதுவாக இந்தியாவில் அனிமேஷன் படங்கள் வரவேற்பை பெறுவது குறைவு. ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் மட்டுமே இந்தியாவில் வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் படம் நல்ல வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் 14வது நாளான நேற்று ரூ.5 கோடி வசூலித்துள்ளது. கன்னடத்தில் ரூ.15 லட்சம், தெலுங்கில் ரூ.1.03 கோடி, இந்தியில் ரூ.4.1 கோடி, தமிழில் ரூ.6 லட்சம், மலையாளத்தில் ரூ.1 லட்சம் இப்படம் வசூலித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் இப்படம் ரூ.200 கோடியை தாண்டும் என்று சொல்லப்படுகிறது.