பெங்களூரு: கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவான ‘சு ஃப்ரம் சோ’ திரைப்படம் நாடு முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு ஃப்ரம் சோ’ (சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா). பெரிய அளவில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. எனினும் ஓரிரு நாட்களிலேயே இப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் வாய்வழியாக காட்டுத் தீ போல பரவின.
வெறும் ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை ஆச்சர்யகரமான வகையில் நாடு முழுவதும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி புக் மை ஷோ தளத்தில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கேரளாவில் வெளியான இப்படம் அங்கும் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.
ராஜ் பி ஷெட்டியின் லைட்டர் புத்தா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் கேரள உரிமையை துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் கைப்பற்றியது. தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. எவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தாலும் சரி, இது போல சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் எந்தவித விளம்பரமும் இல்லாமலே படம் மக்களை போய் சேரும் என்பதற்கு ‘சு ஃப்ரம் சோ’ மற்றொரு சான்று.