பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 5 பெண்கள் பிரஜ்வலுக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறப்பு விசாரணை பிரிவு போலீஸார் இவ்வழக்கில் 1,632 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அனைத்துகட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் ஆகஸ்ட் 1-ம் தேதி தீர்ப்பை அளிப்பதாக கூறியிருந்தார். இதனால் பிரஜ்வல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது நீதிபதி சந்தோஷ் கஜனன் பட், ‘‘இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அரசு தரப்பால் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. அதற்கான சாட்சியங்களும், ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது.அவருக்கான தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்று) வெளியிடப்படும்” என தீர்ப்பளித்தார்.
இதனைக் கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தலையில் கையை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதார். தேவகவுடாவின் உறவினர்களும், மஜதவினரும் வருத்தத்தோடு நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து அரசு வழக்கறிஞர் அசோக் நாயக் கூறுகையில், ‘‘இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைத்த வெற்றியாகும்”என்றார்.