புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, ‘‘மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன’’ என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வாக்குகள் திருடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிய அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை, பொறுப்பற்றவை.
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் பாரபட்சமின்றியும் வெளிப்படையாகவும் பணியாற்றுகின்றனர். எனவே இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.