சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட சாலைப் பணிகள் மூலம் நெடுஞ்சாலைத் துறையிலும் தமிழகமே சிறந்த மாநிலமாக புதிய வரலாறு படைத்து வருவதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், சாலை வசதிகளைப் பெருக்கிய முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி நெடுஞ்சாலைத் துறையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை புகழ்பெறச் செய்தார்.
இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.3,858 கோடி மதிப்பீட்டில் 448 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைகள், ரூ.2,207 கோடி மதிப்பில் 1,681 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், ரூ.2,807 கோடி மதிப்பீட்டில் 383 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைப் பணிகளும், ரூ.709 கோடி மதிப்பீட்டில் 357 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ரூ.17,154 கோடி மதிப்பீட்டில் 9,620 கி.மீ நீளமுள்ள சாலைப் பணிகள் மற்றும் ரூ.1,161 கோடி மதிப்பீட்டில் 996 பாலம், சிறு பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ.731 கோடி மதிப்பில் 164 கி.மீ. நீளத்துக்கு நகர்ப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும் ரூ.2,074 கோடி மதிப்பீட்டில் சாலை ஓடுதளப்பாதை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 6,805 கி.மீ. நீளச் சாலைகளில் ஓடுதளப் பரப்பை மேம்படுத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.662 கோடி மதிப்பீட்டில் 1,652 சாலைப் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன. ரூ.307.8 கோடி மதிப்பீட்டில் பார்த்திபனூர், திருத்தணி, குன்னூர் உள்ளிட்ட 10 புறவழிச்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ.4,907.17 கோடி மதிப்பீட்டில் 5,064.53 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின்கீழ் 5 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வண்டலூர்- வாலாஜாபாத் சாலை நான்கு வழித் தடத்திலிருந்து ஆறு வழித்தடச் சாலையாக ரூ.180.09 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1372 கோடி மதிப்பீட்டில் 1049 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன:
நபார்டு கடனுதவி மற்றும் மாநில நிதியுதவி திட்டத்தின்கீழ் நபார்டு அலகின் மூலம் ரூ.1,137.62 கோடி மதிப்பீட்டில் 278 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 29 இடங்களில் ரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலங்களாகவும் கீழ்பாலங்களாகவும் அமைக்கப்பட்டு போக்குவரத்து இனிதாக நடைபெற திமுக அரசு வழிவகுத்துள்ளது.
சாலைகளில் கண்டறியப்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் உதவியுடன் அறிந்து சரிசெய்ய நம்ம சாலை செயலி என்னும் புதிய செயலி உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
வளர்ந்து வரும் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் களத்தில் கடைப்பிடித்து சாலை, பாலப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கும், இதர அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. 22 மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் 454 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் சாலைப் போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 919 பேர் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மேற்கு வட்டச்சாலை, பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை, தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலை உள்ளிட்ட புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய பல சாலைத் திட்டங்கள், மேம்பாலப் பணிகளால் மற்ற துறைகளைப் போலவே இந்தியாவில் தமிழகம் நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.