லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக பந்துவீசி விக்கெட்களைச் சாய்த்தனர்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101, கேப்டன் ஷுப்மன் கில் 147, ரிஷப் பந்த் 134 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டங், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், பிரைடன் கார்ஸ், ஷோயிப் பஷீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தை ஆலி போப் 100 ரன்களுடனும், ஹாரி புரூக் ரன் எடுக்காமலும் தொடங்கினர்.
மேற்கொண்டு 6 ரன்கள் சேர்த்த நிலையில் ஆலி போப், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 137 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து விளையாட வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி 52 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில், சிராஜ் பந்துவீச்சில் வீழ்ந்தார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜேமி ஸ்மித்தும், ஹாரி புரூக்கும் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். ஜேமி ஸ்மித் 52 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்த நிலையில், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த கிறிஸ் வோக்ஸும் அதிரடியாக விளையாடினார்.
மறுமுனையில் அபாரமாக விளையாடிய ஹாரி புரூக் சதமெடுக்க ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், பிரசித் கிருஷ்ணா பந்தில் துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 112 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 99 ரன்களைச் சேர்த்தார் அவர்.
கிறிஸ் வோக்ஸ் 38, பிரைடன் கார்ஸ் 22, ஜோஷ் டங் 11 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். ஷோயிப் பஷீர் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 465 ரன்களில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பும்ரா 5 விக்கெட்களையும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்களையும், சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய இந்திய அணி 23.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரைடன் கார்ஸ் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து அவர் வீழ்ந்தார். சாய் சுதர்ஷன் 48 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் க்ராலி வசம் பிடிகொடுத்து அவர் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 47 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 6 ரன்களும் எடுத்திருந்தனர்.
கருப்புப் பட்டை: முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் சைட் லாரன்ஸ் (வயது 61) நேற்று காலமானார். இதைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய, இங்கிலாந்து அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
2-வது முறையாக 450 பிளஸ்: இங்கிலாந்தின் ஹெடிங்லி மைதானத்தில் 2-வது முறையாக இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 450-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளன. ஹெடிங்லி மைதானம் கட்டப்பட்ட 70 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே 450-க்கும் மேற்பட்ட ரன்களை முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் குவித்துள்ளன. இதற்கு முன்பு 2006-ல் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 515 ரன்களும், பாகிஸ்தான் 538 ரன்களும் குவித்தன. இந்த டெஸ்டில் இங்கிலாந்து 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4 கேட்சுகள்: முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சில் 4 கேட்சுகளை இந்திய வீரர்கள் கோட்டை விட்டனர். 3 கேட்சுகளை யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், ஒரு கேட்ச்சை ரவீந்திர ஜடேஜாவும் கோட்டை விட்டனர்.
12 முறை: வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை, முன்னாள் கேப்டன் கபில் தேவுடன், பும்ரா பகிர்ந்துகொண்டார். கபில்தேவ் 66 டெஸ்ட் போட்டிகளில் 12 முறையும், பும்ரா 34 டெஸ்ட் போட்டிகளில் 12 முறையும் 5 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்த வரிசையில் இஷாந்த் சர்மா 9 முறையும், ஜாகீர் கான் 8 முறையும், இர்பான் பதான் 7 முறையும் 5 விக்கெட்களை வெளிநாட்டு மைதானங்களில் சாய்த்துள்ளனர்.
3-வது வீரர்: ஹெடிங்லி மைதானத்தில் 99 ரன்களில் ஆட்டமிழந்த 3-வது வீரராக ஹாரி புரூக் மாறியுள்ளார். இதற்கு முன்பு 1987-ல் சலீம் மாலிக்கும் (பாகிஸ்தான்), 1994-ல் மைக்கேல் ஆதர்டனும் (இங்கிலாந்து) 99 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் 99 ரன்களில் வீழ்ந்த 2-வது இங்கிலாந்து வீரராக புரூக் உள்ளார்.இதற்கு முன்பு 2001-ல் மொஹாலியில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் டிரஸ்கோத்திக் 99 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார்.