சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. 19 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் ஆட்டங்களின் முடிவில் சேலம், திருநெல்வேலி, சென்னை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், திருவாரூர் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு முன்னேறின.
நேற்று நடைபெற்ற முதல் கால் இறுதி ஆட்டத்தில் சேலம் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. சேலம் அணி சார்பில் வர்ஷா 2 கோல்களும், காவ்யா ஒரு கோலும் அடித்தனர். 2-வது கால் இறுதி ஆட்டத்தில் நாமக்கல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி அணியை தோற்கடித்தது. நாமக்கல் அணி தரப்பில் துர்கா கோல் அடித்தார்.
3-வது கால் இறுதி ஆட்டத்தில் திருவாரூர் 6-1 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் அணியை வீழ்த்தியது. திருவாரூர் அணி சார்பில் தர்ஷினி 2 கோல்கள் அடித்தார். ஐஸ்வர்யா, தர்ஷிகா, சஹானா, அனு (சுயகோல்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 4-வது கால் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் 5-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூர் அணியை தோற்கடித்தது. திண்டுக்கல் அணி சார்பில் பிரதிக் ஷா 4, காவியா ஒரு கோல் அடித்தனர்.
இதைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரை இறுதியில் நாமக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் சேலம் அணி தோற்கடித்தது. நாமக்கல் அணி தரப்பில் துர்கா கோல் அடித்து அசத்தினார். 2-வது அரை இறுதியில் திண்டுக்கல் – திருவாரூர் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. திண்டுக்கல் அணி தரப்பில் பிரதிக் ஷா 2 கோல்கள் அடித்தார். திருவாரூர் அணி சார்பில் சஹானா, தர்ஷினி தலா ஒரு கோல் அடித்தனர். வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட சடன் டெத்தில் திண்டுக்கல் அணி 8-7 என்ற என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கால்பதித்தது.
இன்று மாலை 3 மணி அளவில் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் – நாமக்கல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.