புகரெஸ்ட்: கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இது அவர் வென்றுள்ள முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டமாகும்.
ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் மாஸ்டர்களான பிரான்ஸின் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை-பிரேக்கர் நடத்தப்பட்டது. முதல் டை-பிரேக்கரில் அலிரேசா ஃபிரூஸ்ஜா மற்றும் பிரக்ஞானந்தா விளையாடினர். ஆட்டம் டிரா ஆனதால் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது டை-பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா இடையிலான ஆட்டம் டிரா ஆனது. 3-வது டை-பிரேக்கரில் பிரக்ஞானந்தா, வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி 1 புள்ளியை பெற்றதோடு சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 77,667 டாலர்கள் அவருக்கு பரிசுத் தொகை கிடைத்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 66.48 லட்சம் என தெரிகிறது. “ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரை வென்றுள்ளது. நம்பமுடியாத உணர்வை இது தருகிறது. எனக்கு தொடர்ந்து ஊக்கம் தரும் அணியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி!” என பிரக்ஞானந்தா கூறியுள்ளார். இந்த தொடரில் குகேஷ் 6-ம் இடம் பிடித்துள்ளார்.