சென்னை: தமிழகத்தில் 2020-ம் ஆண்டுக்கு பின், பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தேவதாஸ்காந்தி வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்கள், 2020-ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. இருப்பினும், 2020-ம் ஆண்டுக்கு பின்னும் பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் பிஎஸ் 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத் ராஜா, “பிஎஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ததில் பல அதிகாரிகள் தவறிழைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்.” எனவும் கேட்டுக்கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, “மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.