சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் ஜூன் 4-க்கு தள்ளிவைத்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் சென்னை பெருநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான எங்களுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கான யானை சின்னத்தை வேறு எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடிகர் விஜய்யின் தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சென்னை பெருநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றம் வரும் ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.