கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது, “ரெட்ரோ எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். நான் இயக்கிய ‘இறைவி’ படம் ரிலேஷன்ஷிப்பில் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என்பதாக இருந்தது. பெண் என்பவள் எப்போதும் தன் சுதந்திரத்தை ஏன் ஓர் ஆணிடம் ஒப்படைக்கிறாள் என்ற கேள்வி என் சின்ன வயதில் இருந்தே இருந்தது. ஒரு காதல் கதையை எழுத வேண்டும் என்று நினைத்தேன். என் மனைவி கூட ஏன் வன்முறையான படங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறாய். காதல் படத்தை எடுக்க மாட்டாயா? எனக் கேட்பார். ‘ரெட்ரோ’ படத்தின் கதையை நான் பல வருஷத்துக்கு முன் எழுதினேன். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்குப் பிடிக்கும்.
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை நிறைவு செய்த பிறகு நானும் சூர்யா சாரும் சந்தித்தோம். நான் சூர்யா சாரின் ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கனவு கண்டேன். இது ‘ரெட்ரோ’ படத்தில் நடந்திருக்கிறது” என்றார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.