மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அவரது தேர்வு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர்.
எதிர்வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதை சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இருப்பினும் இதன் பின்னர் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் அறிவித்தார். அவருடன் கோலியும் இணைந்து கொண்டார். ஏற்கெனவே 2024-ல் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதும் ஓய்வு பெறுவதாக இருவரும் அறிவித்தனர். இந்த சூழலில் தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து தற்போது ரோஹித் விடுவிக்கப்பட்டுள்ளார்.
“மூன்று கிரிக்கெட் பார்மெட்டுக்கு மூன்று கேப்டன்களை நியமிப்பது சாத்தியம் இல்லை. 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அதிக அவகாசம் இருப்பது போல தெரியும். ஆனால், இந்த பார்மெட்டில் இப்போது நாம் அதிக போட்டிகளில் விளையாடுவது இல்லை. அதனால் கேப்டன்சி ரோலில் புதியவருக்கு போதுமான வாய்ப்பு அவசியம். அது அவருக்கு திட்டமிடல் சார்ந்து அதிகம் உதவும்.
ஏனெனில், இந்திய அணி கடைசியாக கடந்த மார்ச் மாதம் சாம்பியன் டிராபியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தது. அதன் பிறகு இந்த பார்மெட்டில் வரும் 19-ம் தேதி தான் விளையாடுகிறது.
இளம் வீரரான ஷுப்மன் கில், அழுத்தம் நிறைந்த சூழலில் என்ன செய்தார் என்பதை இங்கிலாந்து தொடரில் பார்த்தோம். அவரது செயல்பாடு நேற்மறையாக அமைந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது ரெக்கார்டுகளையும் நாம் கவனிக்க வேண்டும். இதை வைத்துதான் அவரை கேப்டனாக தேர்வு செய்துள்ளோம்” என அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
26 வயதான கில், இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன் மூலம் 2,775 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 59.04. 8 சதம் மற்றும் 15 அரைசதம் பதிவு செய்துள்ளார்.