ஆண்டிபட்டி: திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து இன்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பலன்பெற உள்ளன.
வைகை அணையில் இருந்து பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசன பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்கள் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப்பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கர் என்று மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பலன்பெற்று வருகின்றன. இப்பகுதி பாசனத்துக்க நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்து தண்ணீரை திறந்து வைத்தார். தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் ரஞ்ஜீத்சிங், கேஜே.பிரவீன்குமார், செ.சரவணன், தேனி எம்பி.தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விநாடிக்கு ஆயிரத்து 130 கனஅடி திறக்கப்பட்டது. இதே அளவு 45 நாட்களுக்கும், அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 493 மில்லியன் கனஅடிநீர் திறக்கப்பட உள்ளது.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட 53 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட 5ஆயிரத்து 697 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 811 ஏக்கர் நிலங்களும், மேலூர் வட்டத்துக்கு உட்ட 48 ஆயிரத்து 963 ஏக்கர் நிலங்களும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்துக்கு உட்பட்ட 478 ஏக்கர்நிலங்களும் சிவகங்கை வட்டத்துக்கு உட்ட 5 ஆயிரத்து 561 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்துக்கு ட்பட்ட 146 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்களும், உசிலம்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட 13 ஆயிரத்து 723 ஏக்கர் நிலங்களும், திருமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 982 ஏக்கர் நிலங்களும், பேரையூர் வட்டத்துக்கு உட்பட்ட 387 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெற உள்ளன.
ஆகவே திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெறும்படி அமைச்சர் பி.மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சிவபிரபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் சேகரன், முருகேசன், குபேந்திரன், வட்டாட்சியர் மருதுபாண்டி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.