சென்னை: ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.16) ஒருசில இடங்களிலும், நாளை (17-ம் தேதி) பெரும்பாலான இடங்களிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து 21-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், 17-ம் தேதி மேற்கண்ட பகுதிகளுடன், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
18-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 19-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்
களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம், நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 2 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம், நீலகிரி மாவட்டம் தேவாலா, விண்ட் வொர்த் எஸ்டேட், பில்லிமலை எஸ்டேட்டில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.