சென்னை: வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு, அரசியலமைப்பின் விழுமியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பாதுகாப்பதில் மகத்தான வெற்றி என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வக்பு திருத்தச் சட்டம் 2025 குறித்த உச்ச நீதிமன்றத்தின் மைல்கல் உத்தரவு, நீதி, அரசியலமைப்பின் விழுமியங்கள், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பாதுகாப்பதில் மகத்தான வெற்றியாகும். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மற்றும் மற்றவர்களின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நியாயம், சமத்துவம், மத சுதந்திரம் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும் விதிகளை நிறுத்திவைத்துள்ளது.
வக்பு வாரியத்துக்கு சொத்தை அளிக்க ஒருவர் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை கட்டாயமாக கடைப்பிடித்திருக்க வேண்டும் என்ற விதிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றுபவரா என்பதை உறுதிப்படுத்த அவர் எத்தனை ஆண்டு காலம் அதை பின்பற்றி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக இஸ்லாத்தில் எவ்வித விதிகளும் இல்லாத நிலையில், அரசின் இந்த விதி தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசு சொத்தா என்பதைத் தீர்மானிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்கும் விதியை நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. சர்ச்சைக்குரிய வக்பு நிலம் குறித்து, தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அதன் நிலை பாதிக்கப்படாமல் இருக்கும். அந்த நிலத்துக்கு மூன்றாம் தரப்பு உரிமை கோர முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியை அடைவதில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கிய சட்டக் குழுவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.