விழுப்புரம்: திண்டிவனத்தில் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. மேலும் அலுவலகத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் – மயிலம் சாலையில் உள்ள வன்னியர் சங்கம் தலைமை அலுவலகத்தில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு, கடந்த 38 ஆண்டுகளாக செப்.17-ம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மரியாதை செலுத்துவது வழக்கம்.
மோதல் போக்கு தீவிரம்: தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதலால், பாமக தொண்டர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி விமர்சிக்கின்றனர். இதற்கிடையே, பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டதாக ராமதாஸ் நேற்று முன்தினம் அறிவித்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது.

முன்னிலையில் மோதிக் கொண்ட ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள்.
இந்நிலையில், வன்னியர் சங்க அலுவலகத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அன்புமணி செப்.17-ம் தேதி அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக, வன்னியர் சங்க அலுவலகத்தை அவரது தரப்பினர் கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த ராமதாஸ் ஆதரவாளர்கள், வன்னியர் சங்க அலுவலகத்தின் முகப்பு பகுதியில் இரவோடு இரவாக புதிய இரும்பு கதவு ஒன்றை அமைத்து, அதற்கு பூட்டு போட்டனர்.
இதற்கிடையே வன்னியர் சங்க தலைமை அலுவலகம் முன்பு நேற்று இரு தரப்பினரும் திரண்டனர். இதனால் முன்னெச்சரிக்கையாக திண்டிவனம் போலீஸார் அங்கு குவிந்தனர். போலீஸார் சமாதானப்படுத்த முயன்றும், வாக்குவாதம் முற்றி, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு அவர்களை போலீஸார் சமதானப்படுத்தினர்.
பின்னர் இரு தரப்பினரும், திண்டிவனம் காவல் நிலையத்துக்குச் சென்று, வன்னியர் சங்க அலுவலகத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரினர். டிஎஸ்பி பிரகாஷ் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு சென்ற வருவாய்த் துறையினர், கதவை மூடி சீல் வைத்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டுள்ளது.