மதுரை: மதுரையில் விஜயகாந்த் சகோதரி விஜயலட்சுமி (78) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவனத் தலைவரான விஜயகாந்தின் சகோதரியும், மருத்துவருமான விஜயலட்சுமி மதுரையில் மருத்துவமனை நடத்தினார். இவரது கணவர் துரைராஜ், நரம்பு சுருள் நோய் தடுப்பு நிபுணராக உள்ளார்.
உடல்நலக்குறைவு: வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டில் வசித்து வந்த விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல், இறுதி அஞ்சலிக்காக மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், இளைஞரணிச் செயலாளர் விஜயபிரபாகரன், அவரது தம்பி சண்முக பாண்டியன் ஆகியோர் விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மதுரையைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர், முக்கியப் பிரமுகர்களும் விஜய லட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நேற்று மாலை கீரைத்துறை மின் மயானத்தில் விஜயலட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.