சென்னை: கூட்டணி கட்சிகளை பிளவுபடுத்தி, கூறு போடுவது பாஜகவின் வழக்கம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்போம் என்று பேசியிருக்கிறார். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடந்தது. 4 ஆண்டுகள் இவர் முதல்வராக இருந்தார்.
அப்போது ஏன் வாய் திறக்கவில்லை. இவர் செய்வது சந்தர்ப்பவாத அரசியல். முத்துராமலிங்க தேவர் மீது எந்த பற்றும் பழனிசாமிக்கு கிடையாது. செங்கோட்டையன் விவகாரம் அவர்களுடைய உட்கட்சி பிரச்சினை.
பாஜக எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறார்களோ அந்த கட்சியை பிளவுபடுத்தி, கூறு போடுவது தான் வழக்கம். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை பிரித்தது போல பாஜக எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கட்சியை பிளவுபடுத்தி கூறு போடும் பணியை செய்து வருகிறது. இவ்வாறு கூறினார்.
முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர் பவன் கேரா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை என மக்கள் மீது திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாக்குரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. அந்த உரிமையை கூட கொடுக்காமல் வாக்கு திருட்டியில் தேர்தல் ஆணையமும், பாஜகவும் ஈடுபடுகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் கடைக்கோடி நிலையிலிருந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். இளைஞர்கள் அதிக அளவில் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் வலிமை பெற்று வருகிறது. கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வலிமையாக உள்ளது. கேரளாவில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.