சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மேலும் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.80,480-க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்ப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க எண்ணியிருந்தோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
குறிப்பாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மேலும் உயர்ந்து, நாள்தோறும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது.
அந்த வகையில், கடந்த 6-ம் தேதி பவுன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தது. அன்றை தினம், ரூ.80,040-க்கு விற்பனையானது.
இதுபோல, வெள்ளி விலையும் சற்று உயர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மேலும் உயர்ந்து, மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.80,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.55 உயர்ந்து, ரூ.10,060-க்கு விற்கப்பட்டது.
இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.140 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து, ரூ.1.40 லட்சமாகவும் இருந்தது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.