மும்பை: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா ‘ஏ’ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 16-ம் தேதி 19-ம் தேதி வரை லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெறுகிறது. இதே மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த கருண் நாயர் நாயர் சேர்க்கப்படவில்லை. அதேவேளையில் அந்த தொடரில் காயம் காரணமாக பாதியில் விலகியிருந்த நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கு தயாராகும் விதமாக சீனியர் வீரர்களான கே.எல்.ராகுல், முகமது சிராஜ் ஆகியோர் 2-வது போட்டியில் மட்டும் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நாராயணன் ஜெகதீசனுக்கும் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஏ அணி விவரம்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், நாராயணன் ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியன், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், கலீல் அகமது, மானவ் சுதர், யாஷ் தாக்குர்.