சென்னை: இந்த ஆண்டின் அரிய முழு சந்திர கிரகணம் இன்று (செப்.7) நடைபெற உள்ளது. இதை வெறும்கண்களால் காண முடியும்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் தென்பட்டது. அதைத்தொடர்ந்து முழு சந்திர கிரகணம் இன்று (செப்.7) நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.57 முதல் 1.27 மணி வரை மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும். இதில் முழு சந்திர கிரகணம் 11.42 முதல் 12.33 மணி வரை தென்படும். அப்போது சந்திரன் அடர்சிவப்பு நிறத்தில்மிளிரும்.
இது ரத்த நிலா (பிளட் மூன்) என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின்கிழக்கு பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல், ஆர்க்டிக், அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் தெரியும். குறிப்பாக இந்தியாவில் சென்னை, பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களில்தெளிவாக பார்க்க முடியும். இந்த முழு கிரகணத்தை வானம் தெளிவாக இருந்தால் வெறும் கண்களாலேயே கண்டு ரசிக்கலாம்.
இதற்கிடையே, இந்நிகழ்வை தொலைநோக்கி வழியாக பொதுமக்கள் பார்வையிட சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு 9 மணி முதல் கிரகணம் விடும் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இத்தகைய அரிய வானியல் நிகழ்வு இனிமேல் 2028 டிசம்பர் 31-ல் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.