புதுடெல்லி: 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏல விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், அதிகாரிகளிடமிருந்து தேவையான நடைமுறைகளுடன் போட்டிகளை நடத்த குஜராத் மாநில அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், குஜராத் அரசுக்குத் தேவையான மானிய உதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். விளையாட்டுப் போட்டிகளின் போது ஏராளமான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருவார்கள் என்பதால் உள்ளூர் வணிகங்கள் பயனடைந்து அதிக வருவாய் ஈட்டப்படும்.
உலகத்தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன பயிற்சி வசதிகள் ஆகியவற்றுடன் தீவிர விளையாட்டு கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு சிறந்த நகரமாக அகமதாபாத் உள்ளது. உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம் அதன் திறன் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுகளுக்கு அப்பால், இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது சுற்றுலாவை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், லட்சக் கணக்கான இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது தவிர, விளையாட்டு தொடர்பான அறிவியல் அம்சங்கள், நிகழ்வுகள் தொடர்பான செயல்பாடுகள், மேலாண்மை போன்றவற்றால் பல வாய்ப்புகள் ஏற்படும். போக்குவரத்து, தகவல் ஒலிபரப்பு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு போன்ற துறைகளிலும் செயல்பாடுகள் அதிகரித்து அதன் மூலம் பலர் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
உலக அளவில் மதிப்புமிக்க இத்தகைய நிகழ்வை நடத்துவது தேசிய பெருமை, தேச ஒற்றுமை ஆகியவை தொடர்பாக வலுவான உணர்வை வளர்க்கும். இது ஒரு பகிரப்பட்ட தேசிய அனுபவத்தை வழங்குவதுடன் நமது நாட்டின் உறுதித் தன்மையை அதிகரிக்கும். இது புதிய தலைமுறை விளையாட்டு வீரர்கள் விளையாட்டை ஒரு தொழில்முறைத் தேர்வாகத் தேர்ந்தெடுக்கவும், அனைத்து நிலைகளிலும் விளையாட்டுகளில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கவும் உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.