யோகிபாபு நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் நடிகர் ரவி மோகன்.
நடிகர் ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்பை ரவி மோகன் வெளியிட்டார். ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் படம் ஒன்றை ரவிமோகன் முதல்முறையாக தயாரிக்கிறார். இப்படத்துக்கு ‘ப்ரோகோட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து யோகிபாபு வைத்து தான் இயக்கும் படம் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன் மூலம் முதல்முறையாக இயக்குநராக அவதாரம் எடுக்கிறார் ரவிமோகன். இந்த இரண்டு படங்களையும் நடிகர் சிவராஜ்குமார், நடிகை ஜெனிலியா இருவரும் கிளாப் அடித்து தொடங்கி வைத்தனர்.