பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின், நானி நடித்த ‘எவடே சுப்ரமணியம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர், நடிகை சாவித்ரியின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து, ‘நடிகையர் திலகம்’ (மகாநடி) என்ற படத்தை இயக்கினார். இந்த படம், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது.
இதையடுத்து பிரபாஸ், அமிதாப், கமல்ஹாசன் நடிப்பில் ‘கல்கி 2898 ஏடி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் ஆயிரம் கோடி வசூலித்தது. இதன் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு, பிரபாஸ் பிசியாக இருப்பதால் தாமதமாகி இருக்கிறது.
இந்நிலையில், இயக்குநர் நாக் அஸ்வின், ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் அஸ்வினி தத், ரஜினியை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அப்போது நாக் அஸ்வின் சொன்ன கதை, ரஜினிக்குப் பிடித்திருப்பதாகவும் முழு திரைக்கதையுடன் வந்து சந்திக்குமாறு அவர் கூறியதாகவும் இதனால் இவர்கள் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.