சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஆகஸ்ட் 27, 28 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிசா – மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 26) முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஆகஸ்ட் 27, 28 தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 26) முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்ப நிலை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 26) முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 6 செ.மீ மழை, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை, கடலூர் மாவட்டம் புவனகிரி, அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை, மதுரை வடக்கு, மதுரை மாநகரம், தல்லாகுளம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, கடலூர் மாவட்டம் குப்பநத்தம், விருதாச்சலம், திருச்சி மாவட்டம் நந்தியாறு ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.