இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் அறிவித்துள்ளதால் அவரை படங்களில் இருந்து மிஸ் பண்ண உள்ளதாக அனிருத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது “‘லியோ’, ‘ஜனநாயகன்’ மற்றும் அரசியலுக்கு விஜய் சென்றது குறித்த கேள்விகளுக்கு அனிருத், ’லியோ’ படத்தின் ட்ராக்குகளை தனித்தனியாக வெளியிட்டு விட்டோம். அதனால் தான் மொத்தமாக OST ஆக வெளியிடவில்லை. அனைத்தையும் சேர்த்து விரைவில் வெளியிட்டுவிடலாம். ’ஜனநாயகன்’ படத்தின் இசை அருமையாக வந்திருக்கிறது. ‘மதராஸி’ வெளியானவுடன் முழுமையாக அப்படத்தில் தான் கவனம் செலுத்தவுள்ளேன்.
விஜய் சாருடன் பணிபுரிந்த படங்களின் பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பாடல்களைத் தாண்டி அதனை விஜய் சார் திரையில் கொண்டு வரும் போது அதற்கு பெரிய மதிப்பு இருக்கும். விஜய் சாரை படங்களில் இருந்து மிஸ் பண்ணவுள்ளோம்” என்று அனிருத் தெரிவித்துள்ளார்.