புதுடெல்லி: ‘இந்தியா மிக விரைவில் ககன்யான் திட்டத்தைத் தொடங்கும். அடுத்து, சொந்தமாக விண்வெளி நிலையம் உருவாக்கப்படும்’ என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, விண்வெளித் துறையில் சாதனைகளைப் படைப்பது தற்போது இந்தியாவின் இயல்பாகிவிட்டது எனக் குறிப்பிட்டார்.
2025-ம் ஆண்டு தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார். அவர் தனது உரையில், “இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆர்யபட்டாவிலிருந்து ககன்யான் வரை” என்பது, இந்தியாவின் கடந்த காலத்தின் நம்பிக்கையையும் அதன் எதிர்காலத்திற்கான உறுதியையும் பிரதிபலிக்கிறது. குறுகிய காலத்தில், தேசிய விண்வெளி தினம் இந்திய இளைஞர்களுக்கு உற்சாகத்தையும் ஈர்ப்பையும் அளிக்கும் ஒரு தருணமாக மாறியுள்ளது. இது தேசிய அளவில் பெருமைக்குரிய விஷயம்.
விண்வெளித் துறையில் சாதனைக்குப் பின் சாதனைகளை எட்டுவது இந்தியா மற்றும் அதன் விஞ்ஞானிகளின் இயல்பான பண்பாக மாறிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா சந்திரனின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடாக மாறி, வரலாற்றை உருவாக்கியது. விண்வெளியில் டாக்கிங்-அன்டாக்கிங் திறன்களைக் கொண்ட உலகின் நான்காவது நாடாகவும் இந்தியா மாறியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றிய குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவைச் சந்தித்தேன். அவர் அந்த மூவண்ணக் கொடியை என்னிடம் காட்டினார். அதைத் தொட்ட உணர்வு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
இந்தியா செமி – கிரையோஜெனிக் என்ஜின்கள் மற்றும் மின்சார உந்துவிசை போன்ற திருப்புமுனை தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில், இந்திய விஞ்ஞானிகளின் அயராத முயற்சிகள் மூலம் இந்தியா ககன்யான் திட்டத்தைத் தொடங்கும். வரும் ஆண்டுகளில், இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவும். இந்தியா ஏற்கெனவே சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை எட்டிவிட்டது. இப்போது விண்வெளியின் மற்ற பகுதிகளை ஆராய வேண்டும். இந்த ஆராயப்படாத பகுதிகள் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான முக்கிய ரகசியங்களை வைத்திருக்கின்றன. விண்மீன் திரள்களுக்கு அப்பால் நமது அடிவானம் உள்ளது!.
விண்வெளியின் எல்லையற்ற விரிவு, எந்த இலக்கும் எப்போதும் இறுதியானது அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அதேபோல், விண்வெளித் துறைக்குள் கொள்கை அளவிலான முன்னேற்றத்தில் இறுதியான நிலை இருக்கக்கூடாது. கடந்த பதினொரு ஆண்டுகளில், நாடு விண்வெளித் துறையில் தொடர்ச்சியான பெரிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது. விண்வெளி போன்ற எதிர்காலத் துறைகள் ஏராளமான கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன.
தனியார் துறை விண்வெளி தொழில்நுட்பத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் தனியார் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் உருவாக்கத்தில் உள்ளது. பொது – தனியார் கூட்டாண்மை மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விண்வெளித் துறையில் இந்தியாவின் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா தனது மண்ணிலிருந்து ஆண்டுதோறும் 5–6 பெரிய ஏவுதல்களைக் காண்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகள் ஏவப்படும் நிலையை இந்தியா அடையும் வகையில் தனியார் துறை முன்னேற வேண்டும். விண்வெளி சமூகத்தினருக்கு அரசு ஒவ்வொரு கட்டத்திலும் உறுதியாக நிற்கும்.
விண்வெளி தொழில்நுட்பத்தை அறிவியல் ஆய்வுக்கான ஒரு கருவியாக மட்டுமல்லாமல், வாழ்க்கையை எளிதாக்குவதற்கான ஒரு வழியாகவும் இந்தியா கருதுகிறது. விண்வெளி தொழில்நுட்பம் இந்தியாவில் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக அதிகரித்து வருகிறது. பயிர் காப்பீட்டுத் திட்டங்களில் செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடு, மீனவர்களுக்கான செயற்கைக்கோள் மூலம் செயல்படுத்தப்பட்ட தகவல் மற்றும் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை பயன்பாடுகள் மற்றும் பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந் திட்டத்தில் புவிசார் தரவுகளைப் பயன்படுத்துதல் போன்றவை இதற்கான உதாரணங்கள்.
வரும் காலங்களில் இந்தியாவின் விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும். தேசிய விண்வெளி தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்தார். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.