சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் மக்கள் வாங்குவது வழக்கம். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் உள்ளது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.9,315-க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.74,520-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்கம் பவுனுக்கு ரூ.81,288-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.61,640-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை உயர்வு: இதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.130-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,30,000-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த 20-ம் தேதி வெள்ளி ஒரு கிராம் ரூ.125 என விற்பனையானது குறிப்பிடத்தக்கது.