ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானாவில் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்றப்படுகின்றன. தெலங்கானா மாநிலம், ராமாந்தபூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அன்றிரவு தேர்திருவிழா நடைபெற்றது.
அப்போது மின்சார கம்பங்களில் சுற்றி இருந்த கேபிள், இன்டர்நெட் ஒயர்கள் தேர் மீது உரசியதில், அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கேபிள் ஆபரேட்டர்கள், இன்டெர்நெட் நிறுவனத்தினர் அரசின் மின் கம்பங்களை பயன்படுத்தியதால் மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிரிழந்தனர் என விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அனுமதியின்றி மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை நீக்குமாறு தெலங்கானா அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து ஹைதராபாத் மட்டுமின்றி தெலங்கானா முழுவதும் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்களை மின்வாரிய ஊழியர்கள் நேற்று முதல் அகற்றி வருகின்றனர். ஆந்திராவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி உள்ளிட்ட பல நகரங்களில் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள், இன்டர்நெட் ஒயர்களை மின்வாரிய ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.