புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேரை உள்ளடக்கிய இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று (19-ம் தேதி) நடைபெற உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் தற்போது டி20 திறமையாளர்களின் தொழிற்சாலையாக உள்ளது. குறைந்தது 30 வீரர்கள் தேசிய அணிக்கு விளையாட தயார் நிலையில் உள்ளனர். இந்த வகையில் ஒரு இடத்துக்கு மூன்று முதல் நான்கு வீரர்கள் விளையாடுவதற்கு தகுதியுடன் உள்ளனர்.
முதல் மூன்று இடங்களுக்கு, ஒரே மாதிரியான திறன்களை கொண்ட 6 வீரர்கள் கைவசம் உள்ளனர். கடந்த சீசனில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் அற்புதமாக விளையாடினர். இவர்களுக்கு இணையாக ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோரும் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் அணிக்கு தேர்வாவதில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் இடையே போட்டி நிலவக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க கடந்த சீசனில் இந்திய அணியின் விளையாடும் லெவனில் இடம் பெற்றவர்கள் அப்படியே தொடரக்கூடும் எனவும் கூறப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி 20 அணி கடைசியாக விளையாடிய 20 ஆட்டங்களில் 17-ல் வெற்றிகளை குவித்திருந்தது. இதன் வெற்றி சதவிகிதம் 85 ஆகும். இந்த ஆட்டங்களில் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெறவில்லை.
ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பின்னர் நிலைமை மாறி உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக ஷுப்மன் கில் தனது முத்திரையை பதித்துள்ளார். வணிக நோக்கில் பெரிய பிராண்டாக ஷுப்மன் கில் உருவெடுத்துள்ளார். இதனால் அவரையே டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி ஆகியவற்றுக்கு கேப்டனாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இது தற்போது நிகழாவிட்டாலும், அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்றே கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வருடமாக ஷுப்மன் கில்லும், ஜெய்ஸ்வாலும் டெஸ்ட் போட்டிகளில் மும்முரமாக ஈடுபடுவதற்கு முன்பு, அவர்கள் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்தனர், மேலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் காரணமாக டி 20 போட்டிகளில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்படுவதற்கு முன்னர் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி 20 அணிக்கு துணை கேப்டனாக இருந்தார்.
இன்றைய தேர்வில் ஷுப்மன் கில் டி 20 அணிக்குள் கொண்டுவரப்பட்டால் தொடக்க வீரர்களில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அல்லது திலக் வர்மா ஆகியோரில் யாரேனும் ஒருவர் பேட்டிங் வரிசையில் தங்களது இடங்களை சமரசம் செய்து கொள்ள வேண்டியது வரும். அதேநேரம் ரிங்கு சிங் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த சீசனில் ரிங்கு சிங் அணியில் இடம் பெற்ற போதிலும் அவருக்கு பேட்டிங் செய்ய போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த சில வாய்ப்புகளிலும் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தவில்லை.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பக்கூடும். மேலும் அவருடன் அர்ஷ்தீப் சிங்கின் இடமும் உறுதியானதுதான். 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார். இவர்களுடன் ஹர்ஷித் ராணா இடம் பெற வாய்ப்பு உள்ளது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தருக்கு முன்னுரிமை அளிக்கப்படக்கூடும்.
அக்டோபர் மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ரிஷப் பந்த், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் 2-வது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷிவம் துபே சேர்க்கப்படக்கூடும். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளும் நிலையில் 2-வது விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா அல்லது துருவ் ஜூரெல் இடம் பெறக்கூடும்.