சென்னை: ஐபிஎல் 2025 சீசனின் நடுவில் டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதில், தென் ஆப்பிரிக்க வீரரின் ஒப்பந்தம் லீக்கின் விதிமுறைகளின்படியே இருந்தது என தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது காயம் அடைந்த வேகப் பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்குக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருந்தது. குர்ஜப்னீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரூ.2.20 கோடி தொகைக்கே டெல் வால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் டெவால்ட் பிரேவிஸின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாகவே இருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தின் போது டெவால்ட் பிரேவிஸை யாரும் வாங்கவில்லை. அவர், விலைபோகாத வீரராக இருந்தார். ஐபிஎல் விதிமுறைகளின் படி காயம் காரணமாக அணியில் இருந்து வீரர் விலகினால் அவருக்கு என்ன தொகை வழங்கப்பட்டிருந்ததோ அதே தொகையில்தான் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில்தான் டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
தொடரின் பாதியில் கிடைத்த வாய்ப்பில் சிஎஸ்கே அணிக்காக 6 ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உட்பட 225 ரன்கள் விளாசி கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக அடுத்த சீசனில் அவரை சிஎஸ்கே தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெவால்ட் பிரேவிஸுக்கு அதிக தொகை கொடுக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தயாராக இருந்ததாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சானலில் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அதில் அவர், “டெவால்ட் பிரேவிஸ் குறித்து நான் ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். சிஎஸ்கே அணிக்காக பிரெவிஸ் 2-வது பாதியில் மிகவும் சிறப்பாக விளையாடினார். அதற்கு முன்னதாக சில அணிகள் அவரை வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கேள்விப்பட்டேன். ஆனால் அவரது அடிப்படை விலைக்கு (ரூ.75 லட்சம்) மேல் கூடுதலாக பணம் கொடுக்க அந்த அணிகள் தயாராக இல்லாததால் அவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
பொதுவாக ஒரு மாற்று வீரரை அணியில் அவரது அடிப்படை விலையில் ஒப்பந்தம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் சில நேரம் என்ன நடக்கிறது என்றால், சிலர் தங்களுக்கு கூடுதல் தொகை கொடுத்தால்தான் விளையாட வருவோம் என்று தெரிவிப்பார்கள். ஏனெனில் அடுத்த ஆண்டு அதிக தொகைக்கு விலைபோக வாய்ப்புள்ளது என்று அவர்களுக்கு தெரியும். டெவால்ட் பிரேவிஸ் கேட்ட தொகையை கொடுக்க சிஎஸ்கே அணி தயாராக இருந்ததால், அணியுடன் இணைந்தார். இதன் பின்னர் அணியின் சேர்க்கை பலமானது. மினி ஏலத்துக்கு சிஎஸ்கே அணி ரூ.30 கோடியுடன் செல்லக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.
அஸ்வினின் இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஐபிஎல் 2025 தொடரில் மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்யும் போது அணி எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ஐபிஎல் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டே இருந்தது.
ஏப்ரல், 2025-ல், காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸ் 2.2 கோடி ரூபாய் லீக் கட்டணத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற மெகா வீரர்கள் ஏலத்தின் போது குர்ஜப்னீத் சிங்கை ரூ.2.2 கோடிக்கு வாங்கியிருந்தோம். அதே தொகைக்குதான் டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்” என தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசன் தொடங்கிய போதே அஸ்வினின் யூடியூப் சானலில் சிஎஸ்கே அணி குறித்து கடும் விமர்சனங்கள் கூறப்பட்டன. பல வருடங்களுக்கு பின்னர் அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்பிய நிலையில், இது விவாதப்பொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து சீசன் முடியும் வரை சிஎஸ்கே அணி தொடர்பாக தனது சானலில் எந்த கருத்தும் வெளியிடமாட்டேன் என அஸ்வின் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் அஸ்வின் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அணியில் தனது எதிர்காலம் குறித்து அஸ்வின் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அஸ்வின் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்ற ஊகங்கள் வெளிவந்தன. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் விவகாரங்களை அஸ்வின் மீண்டும் பேசி உள்ளது சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.