சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வந்தது. போட்டியின் 9-வது நாளான நேற்று 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 8-வது சுற்றின் முடிவிலேயே 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்திருந்தார் ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமர். அவர், தனது கடைசி சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன் மோதினார்.
இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய வின்சென்ட் கீமர் 41-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், இந்தத் தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும் லைவ்ரேட்டிங்கில் 2750.9 புள்ளிகளுடன் 10-வது
இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி ஆகியோர் மோதிய ஆட்டம் 49-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதேபோன்று அமெரிக்காவின் அவாண்டர் லியாங், இந்தியாவின் விதித் குஜராத்தி மோதிய ஆட்டம் 31-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, சகநாட்டைச் சேர்ந்த ஜோர்டன் வான் பாரஸ்டை 33-வது நகர்த்தலின் போது தோற்கடித்தார். இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால்சரின், சகநாட்டைச் சேர்ந்த வி.பிரணவை 55-வது நகர்த்தலின் போது வீழ்த்தினார்.
கடைசி சுற்றின் முடிவில் வின்சென்ட் கீமர் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி 5 புள்ளிகளுடன் 2-வது இடமும், அர்ஜுன் எரிகைசி 5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர். கார்த்திகேயன் முரளி (5), நிஹால் சரின் (4.5), அவாண்டர் லியாங் (4.5), விதித் குஜராத்தி (4), ஜோர்டன் வான் பாரஸ்ட் (4), வி.பிரணவ் (3), ரே ராப்சன் (3) ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களுடன் தொடரை நிறைவு செய்தனர்.
குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2025 தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வின்சென்ட் கீமருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அத்துடன் 24 ஃபிடே சர்க்யூட் புள்ளிகளும் அவருக்கு கிடைத்தது. இந்த புள்ளிகள் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமானதாகும். அனிஷ் கிரி, அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி ஆகியோர் ஒரே புள்ளிகளை (6 புள்ளிகள்) பெற்றிருந்ததால் அவர்களுக்கு தலா ரூ.10.83 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
முழுமையாக இந்திய வீரர்கள் கலந்து கொண்டுள்ள சேலஞ்சர்ஸ் பிரிவில் 9-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான எம்.பிரனேஷ், சர்வதேச மாஸ்டரான ஜி.பி.ஹர்ஷ்வர்தனுடன் மோதினார். 6.5 புள்ளிகளுடன் களமிறங்கிய பிரனேஷ் 47-வது நகர்த்தலின் போது அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் அபிமன்யு புராணிக், லியோன் லூக் மெடன்டோன்கா ஆகியோருக்கு பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அவர்கள், பயன்படுத்திக் கொள்ளத் தவறினர்.
6 புள்ளிகளுடன் இருந்த லியோன் லூக் மென்டோன்கா தனது கடைசி சுற்றில் அதிபன் பாஸ்கரனுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அதிபன் பாஸ்கரன் வெள்ளை காய்களுடனும், லியோன் லூக் மென்டோன்கா கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டத்தில் அதிபன் பாஸ்கரன் 44-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதனால் லியோன் லூக் மென்டோன்கா பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
அதேவேளையில் 6 புள்ளிகளுடன் தனது கடைசி சுற்றை சந்தித்த அபிமன்யு புராணிக், பா.இனியனுடன் மோதினார். இதில் இனியன் வெள்ளை காய்களுடனும், அபிமன்யு புராணிக் கருப்பு காய்களுடனும் களமிறங்கினர். இந்த ஆட்டத்தில் 97-வது நகர்த்தலின் போது இனியன் வெற்றி பெற்றார்.
அபிமன்யு புராணிக், லியோன் லூக் மென்டோன்கா தங்களது கடைசி சுற்றில் தோல்வி அடைந்ததால் எம்.பிரனேஷ் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.7 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சேலஞ்சர்ஸ் பிரிவில் பட்டம் வென்றதன் மூலம் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் நேரடியாக கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளார் எம்.பிரனேஷ்.
கடைசி சுற்றின் முடிவில் எம்.பிரனேஷ் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அதிபன் பாஸ்கரன் 6 புள்ளிகளுடன் 2-வது இடம்பிடித்து தொடரை நிறைவு செய்தார். அபிமன்யு புராணிக் 6 புள்ளிகளுடன் 3-வது இடமும், லியோன் லூக் மென்டோன்கா 6 புள்ளிகளுடன் 4-வது இடமும் பிடித்தனர்.
பா.இனியன் (5.5), திப்தாயன் கோஷ் (4.5), ஜி.பி.ஹர்ஷ்வர்தன் (4), ஆர்யன் சோப்ரா (4), ஹரிகா துரோணவல்லி (1.5), ஆர்.வைஷாலி (1) ஆகியோர் முறையே 5 முதல் 10-வது இடங்களுடன் தொடரை நிறைவு செய்தனர். அதிபன் பாஸ்கரன், அபிமன்யு புராணிக், லியோன் லூக் மென்டோன்கா ஆகியோர் ஒரே புள்ளிகளை (6 புள்ளிகள்) பெற்றிருந்ததால் இவர்களுக்கு தலா ரூ.3.25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.