சென்னை: ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன், இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் இந்தியன் ரயில்வே, ஜம்மு & காஷ்மீர், ஒடிசா, பரோடா அணிகளும் ‘சி’ பிரிவில் டிஎன்சிஏ லெவன், மும்பை, ஹரியாணா, பெங்கால் அணிகளும் ‘டி’ பிரிவில் ஹைதராபாத், பஞ்சாப், மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், ஜார்க்கண்ட் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டிகள் 3 நாட்களும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டி 4 நாட்களும் நடத்தப்படுகிறது.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டி செப்டம்பர் 6 முதல் 9 வரை நடை பெறுகிறது. லீக் போட்டிகள் கோஜன் ஏ, குருநானக் கல்லூரி உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறுகிறது.
இந்த கிரிக்கெட் தொடர் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் டிஎன்சிஏ தலைவர் பி.அசோக் சிகாமணி, துணைத் தலைவர் ஆடம் சையத், சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசராஜ், துணை செயலாளர் ஆர்.என்.பாபா, இணை செயலாளர் சிவகுமார், புச்சிபாபு கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் டி.வி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் தொடக்க ஆட்டத்தில் இமாச்சல் பிரதேசத்துடனும் டிஎன்சிஏ லெவன் அணி, மும்பையுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது.