நவம்பரில் முதல் அறிவிப்பு இருக்கும் என்று ராஜமவுலி – மகேஷ் பாபு படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழுவினர் தரப்பில் எந்தவொரு அறிவிப்புமே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜமவுலி பகிர்ந்துள்ள அறிக்கையில், “இந்தியாவிலும், உலகமெங்கும் உள்ள அன்பான சினிமா ரசிகர்களே, மகேஷ் பாபுவின் ரசிகர்களே… நாங்கள் படப்பிடிப்பு தொடங்கி சில காலம்தான் ஆகிறது. படத்தைப் பற்றி அறிய உங்கள் ஆர்வத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
ஆனாலும், இந்தப் படத்தின் கதை மற்றும் நோக்கம் மிகவும் விரிவானது, வெறும் போஸ்டர்களோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்புகளோ அதற்கு நியாயம் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். நாங்கள் உருவாக்கும் சாராம்சம் மற்றும் ஆழமான உலகத்தை வெளிப்படுத்தும் விஷயத்தில் நாங்கள் தற்போது பணிபுரிந்து வருகிறோம். அது நவம்பர் 2025-ல் வெளியிடப்படும்.
இதுவரை கண்டிராத வெளிப்பாடாக அது இருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மகேஷ் பாபு முகம் எதுவும் இல்லாமல் கழுத்தில் இருந்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜமவுலியின் இந்த அறிவிப்பால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள்.