ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் கிராம மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் நக்சலைட்களால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 வீடுகள் கட்டும் பணியை மாநில அரசு தொடங்கி உள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது: நக்சல்களின் வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 3,000 வீடுகள் கட்டும் பணி தொடங்கிவிட்டது. பயனாளிகளில் சரணடைந்த நக்சலைட்களும் அடங்குவர். ஏனெனில், வழக்கமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவர்கள் பயனடைய முடியாது. எனவே, சிறப்பு திட்டத்தின் கீழ் அவர்களின் மறுவாழ்வுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.