புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ல் ராஜினாமா செய்தார். இதையடுத்து, வரும் செப். 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. வரும் 21-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். வரும் 22-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஆக. 25-ம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த சூழலில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பாஜக தரப்பில் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சிக்கிம் ஆளுநர் ஓம் மாத்தூர் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. வரும் 13-ம் தேதி முதல் 20-ம்தேதிக்குள் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இண்டியா கூட்டணியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் கடந்த 7-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேசிய மாநாடு, பிடிபி, சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) உட்பட 25 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இண்டியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவருக்கான பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்த பிறகு, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பொது வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்என்று தெரிகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகே, இண்டியா கூட்டணியின் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார். இது குறித்து பாஜக தலைவர் நட்டா, கூட்டணிக் கட்சி தலைவர்களுடன்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
எங்கள் கூட்டணியின் வேட்பாளரே குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார். எனவே, வேட்பாளர் விவகாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். நாடாளுமன்ற அனுபவம் இருக்க வேண்டும். மாநிலங்களவையை திறம்பட வழிநடத்த வேண்டும் என்பதால், பல்வேறு மூத்த தலைவர்களின் பெயர்களை பரிசீலனை செய்து வருகிறோம். குஜராத், கர்நாடகா, சிக்கிம், காஷ்மீர் மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்கள் மற்றும் பல்வேறு முன்னாள் ஆளுநர்கள், நாடாளுமன்ற அனுபவம்மிக்க பாஜக மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில பெண் தலைவர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்படுகின்றன.
தற்போது பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவி வகிக்கிறார். இதேபோல, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
வாக்கெடுப்பு நடைமுறை என்ன? – மாநிலங்களவை செயலாளர் பி.சி. மோடி, குடியரசு துணைத் தலைவர் பதவி தேர்தலுக்கான அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இணைச் செயலாளர் கரிமா ஜெயின், மாநிலங்களவை செயலக இயக்குநர் விஜய்குமார் ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், அவர்களிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு வேட்பாளரை குறைந்தபட்சம் 20 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். இந்த தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். நாடாளுமன்ற வளாகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மக்களவையில் 543 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 233 எம்.பி.க்கள், 12 நியமன எம்.பி.க்கள் இடங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக 788 எம்.பி.க்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள்.
தற்போது மக்களவையில் ஒரு எம்.பி., மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, வரும் தேர்தலில் 782 பேர் மட்டுமே வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற 50 சதவீத எம்.பி.க்களின் ஆதரவுதேவை. இதன்படி 391 எம்.பி.க்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார். நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு 312 எம்.பி.க்களின் பலம் உள்ளது. ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், அந்த கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.