பெங்களூரு: கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று பிரதமர் மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெங்களூருவில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. இதனிடையே, மூன்றாவதாக மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெங்களூருவிலிருந்து பெலகாவி, அமிர்தசரஸ் முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) முதல் புனே வரை செல்லும் ரயில்கள் இதில் அடங்கும். மஞ்சள் தட மெட்ரொ தவிர, மற்றவை இரண்டும் காணொளி வாயிலாக தொடங்கப்பட்டன. இந்த அதிவேக ரயில்கள்பயண நேரத்தைக் குறைப்பதுடன், பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் என அதிகாரிகள் கூறினர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்களூருவில் மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவையை பிரதமர் மோடி, இன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளார். இதன் நீளம் 19 கி.மீ.க்கும் அதிகமாகும். 16 நிலையங்களைக் கொண்ட இத்திட்டம் சுமார் ரூ.7,160 கோடி மதிப்புடையது. இந்த மஞ்சள் பாதை திறக்கப்பட்டதன் மூலம், பெங்களூருவில் செயல்பாட்டு மெட்ரோ நெட்வொர்க் தூரம் 96 கி.மீ.க்கும் அதிகமாக அதிகரிக்கும்.
பெங்களூருவின் தெற்கு மாவட்டங்களில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புதிய மெட்ரோ பாதையால் பயனடைவார்கள் என்று பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.