நடந்து முடிந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி 2025 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே பெரிய அளவில் பேசப்படும் தொடர்களின் வரிசையில் இணைந்தது. காரணம் இரு அணிகளும் கடுமையாக ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடியதே.
இங்கிலாந்து பாஸ்பால் வந்த புதிதில் ஆட்டத்தினை பொழுதுபோக்கு அம்சம் என்று கருதினர், இப்போதுதான் அவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டுள்ளது. காரணம் உலகக்கோப்பையை வெல்ல கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் பிடித்தது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற ஆவல் அந்த அணிக்குத் தலைதூக்கியுள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா கடுமையான பல போராட்டங்களூக்கிடையில் ஆஸ்திரேலியாவை இறுதியில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்கள் ஆனதும் இங்கிலாந்தை தூண்டி விட்டுள்ளது.
அந்த விதத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-1 என்று வெற்றி பெற முடியாமல் போனது இங்கிலாந்து அணிக்கு உள்ளுக்குள் கடும் வெறுப்பையும் சோர்வையும் அளித்திருக்கும். ஆனால் இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை இந்தியா 1-3 என்று தோற்றிருந்தால் கடும் வருத்தமாகியிருக்கும், ஏனெனில் அனைத்து வகைகளிலும் இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. உதாரணத்திற்கு இந்திய பேட்டர்களின் சராசரி இந்தத் தொடரில் கிட்டத்தட்ட 40-ஐ நெருங்கிய வேளியில் இங்கிலாந்து பேட்டகளின் சராசரி 37.57 என்று இருந்தது.
இந்திய அணி 12 சதங்களை அடிக்க, இங்கிலாந்து மொத்தம் 9 சதங்களையே எடுக்க முடிந்தது. இந்தத் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் டாப் 6 வீரர்களில் இந்திய அணி வீரர்களே முதல் 4 இடங்களை ஆக்ரமித்துள்ளனர். ஷுப்மன் கில் 754, ராகுல் 532, ஜடேஜா 516, ரிஷப் பண்ட் 479. பந்து வீச்சில் பென் ஸ்டோக்ஸ், டங் ஆகியோர் மட்டுமே இருக்க, இந்திய அணியில் சிராஜ் டாப் இடத்தில் இருக்க, பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகிய 4 பவுலர்களும் உள்ளனர்.
இன்னொரு புள்ளி விவரம் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் கூறப்பட்டுள்ளது என்னவெனில் இந்திய பேட்டர்கள் 84.6% இங்கிலாந்து பந்துவீச்சை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். மாறாக இங்கிலாந்து 78.2% தான் இந்திய பவுலர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தது. இங்கிலாந்து தங்களது ஆக்ரோஷ பேட்டிங் அணுகுமுறையினால் தப்பி வருவதற்குக் காரணம் தவறான ஷாட்களில் அதிக ரன்களை அவர்கள் எடுத்துள்ளதாக கிரிக் இன்போ புள்ளி விவரம் நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதாவது இங்கிலாந்து அதிகமாக தவறான ஷாட்களை ஆடும்போது ரன் வருகிறது என்பது விக்கெட்டாக மாறினால் அன்று பாஸ்பால் அணுகுமுறைக்குச் சாவுமணிதான். அதற்கான ஆரம்பப் புள்ளி இந்தத் தொடர்தான், காரணம், இங்கிலாந்தின் ஸ்ட்ரைக் ரேட் 11 பாஸ்பால் தொடர்களில் ஆகக்குறைந்து 64.43 ஆக இருந்தது இந்த இந்தியத் தொடரில்தான். உள்நாட்டு மைதானப் பிட்ச்களை மட்டையாக பேட்டிங்குக்குச் சாதகமாகவே போட்டு கடந்த 3 ஆண்டுகளில் பாஸ்பால் காலக்கட்டத்தில் 20 போட்டிகளில் 15 போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது. 4இல் தோல்வி கண்டுள்ளது.
அதே போல் இரு அணிகளிலும் ஒப்பிடும் போது ஷுப்மன் கில் தன் கட்டுப்பாட்டில் இங்கிலாந்து பவுலர்களை வைத்திருந்தார். அதே போல் ராகுலும் அவருக்கு அடுத்த படியாக இருக்கிறார். ஆனால் இங்கிலாந்து பேட்டர்களில் ஜோ ரூட், ஹாரி புரூக்கைத் தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு இந்தியப் பந்து வீச்சை உறுதியாக ஆடவில்லை.
பந்து வீச்சிலும் கிரிக் இன்போ புள்ளிவிவர ஆய்வுகளின் படி இங்கிலாந்து பேட்டர்களை தவறான ஷாட்களுக்குத் தூண்டிய வகையில் இந்தியப் பந்து வீச்சுதான் சிறப்பாக இருந்தது என்கிறது.
இங்கிலாந்து பேட்டர்கள் பந்தை ஆடாமல் விடுவது இப்போதெல்லாம் குறைந்து விட்டது, அந்த வகையில் அவர்கள் ஹை ரிஸ்க் ஆட்டம் ஆடுவதால்தான் அவர்களால் எட்ஜ் பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் டிராவுக்கு ஆட முடியவில்லை, காரணம் அவர்களது தடுப்பாட்ட உத்தி பின் கட்டுக்குச் சென்று விட்டது, டெக்னிக் முன்பை விட கொஞ்சம் கொல்லைப்புறம் சென்று விட்டது.
ஆகவே ஆஷஸ் தொடரில் அவர்கள் ஆஸ்திரேலிய பிட்ச்களில் கொஞ்சமேனும் பொறுமையைக் கடைப்பிடித்து பந்துகளை தேர்வு செய்து ஆடினாலே தவிர இங்கிலாந்தின் இந்த பாஸ்பால் ஆஷஸ் தொடரில் கடும் பின்னடைவைச் சந்தித்து பிரெண்டன் மெக்கல்லம் பிராண்ட் பாஸ்பால் ஆன கதை அல்பாயுசில் முடியும் என்றே கூற வேண்டியுள்ளது.