சென்னை: சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
200 பள்ளிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் யு-14 சிறுமியர் பிரி வில் பருத்திப்பட்டு வேலம்மாள் அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் செங்கல்பட்டு விகாஷ் மந்த்ரா அணியை 50-27 என்ற கணக்கில் வீழ்த்தியது.
சிறுவர் பிரிவில் பொன்னேரி வேலம்மாள் அணி 46-21 என்ற கணக்கில் தூத்துக்குடி விகாஷ் பள்ளியை தோற்கடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றியது. யு-17 சிறுமியர் பிரிவில் கோவை சுகுணா பிஐபி பள்ளியும், சிறுவர் பிரிவில் பொன்னேரி வேலம்மாள் சர்வதேச பள்ளியும் முதலிடம் பிடித்தன.
யு-19 சிறுமியர் பிரிவில் முகப்பேர் டிஏவி பள்ளி 46-44 என்ற கணக்கில் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்டர்நேஷனல் பள்ளி அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. சிறுவர் பிரிவில் ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி முதலிடம் பிடித்தது. பரிசளிப்பு விழாவில் ஆர்.எம்.கே.கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம், துணைத் தலைவர் கிஷோர், இயக்குனர் ஜோதி நாயுடு, செயலாளர் எலமஞ்சி பிரதீப், துணைத் தலைவர் துர்காதேவி பிரதீப், பாடசாலா பள்ளியின் முதல்வர் சந்திரிகா பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் மூத்த துணை தலைவர் செந்தில் தியாகராஜன், இணை செயலாளர் அருள் வெங்கடேஷன், இந்திய கூடைப்பந்து அணியின் பயிற்சியாளர் ஜீனா ஜக்காரியா, திருவள்ளூர் மாவட்ட சங்க துணைதலைவர் ராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.