சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 26 ஆண்டுகளுக்கு பிறகு லாட்டரியை மீண்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த 1999-ல் பிரேம் குமார் துமால் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் லாட்டரியை மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தின் வருவாயை பெருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இமாச்சல் அரசின் கடன் ரூ.1,04,729 கோடியாக உள்ளது. வருவாய் பற்றாக்குறை மானியம், அதாவது மத்திய அரசின் நிதியுதவி 2025-ல் முந்தைய ஆண்டை விட குறைக்கப்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டுகிறது. இந்நிலையில் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றாக லாட்டரியை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதா வரும் 18-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கேரளா, பஞ்சாப், ம.பி., மகாராஷ்டிரா, சிக்கிம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் லாட்டரி மூலம் பஞ்சாப் ரூ.235 கோடியும், சிறிய மாநிலமான சிக்கிம் ரூ.30 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளன. கேரளா ரூ.13,582 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் மற்ற மாநிலங்களை போல லாட்டரிகளை நடத்துவதற்கு டெண்டர் நடைமுறையை பின்பற்ற உள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் ஹர்ஷவரதன் சவுகான் கூறினார்.