அரியலூர்: கங்கைகொண்டசோழபுரத்தில் இன்று (ஜூலை 27) நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, 2 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், பொன்னேரி மற்றும் பொன்னேரி முதல் கோயில் வரையிலான நெடுஞ்சாலை, விழா அரங்கம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கங்கைகொண்ட சோழபுரம் வருகை தரும் பிரதமர் மோடி, பொன்னேரியிலிருந்து கோயிலுக்கு ரோடு ஷோவாக சென்று பொதுமக்களை சந்திக்கும் நிலையில், ஜெயங்கொண்டம் முதல் மீன்சுருட்டி வரையிலான 10 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் நடமாடவும், பொன்னேரியில் மேய்ச்சலுக்கு விடவும் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பொன்னேரியிலிருந்து கோயில் வளாகம் வரை சாலையின் இருபுறமும் பாஜக, அதிமுக கொடிகளுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடிகளும் கட்டப்பட்டுள்ளன. விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பார் என்பதால், அந்தக் கட்சிக் கொடிகளும் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தரும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.