புதுடெல்லி: கார்கில் வெற்றி தினத்தின் 26-வது ஆண்டு நினைவு நாளில், போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று 26-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்ற பெயரில் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கார்கில் வெற்றி நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “கார்கில் வெற்றி நாளில், நமது தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு ராணுவ வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள். அவர்களது தீரமும், தியாகமும் என்றும் நம் நினைவை விட்டு நீங்காது’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கார்கில் வெற்றி தினத்துக்காக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கார்கில் வெற்றி தினத்தில் நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாள், நாட்டின் பெருமையைப் பாதுகாக்க தங்கள் உயிரை அர்ப்பணித்த இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் இணையற்ற துணிச்சலையும், வீரத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. தாய்நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். ஜெய் ஹிந்த்!” எனத் தெரிவித்துள்ளார்.