சென்னை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல். தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
பிறந்த தேதியை திருத்துவதற்கு மேற்கண்ட ஆவணங்களுடன் பிறப்பு சான்றிதழ், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், பள்ளி சேர்க்கை நீக்க பதிவேடு ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
திருத்தம் கோரும் விண்ணப்பத்துடன் இந்த ஆவணங்கள் முறையாக இணைக்கப்பட்டிருந்தால், அதை இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அத்தகைய விண்ணப்பங்களை தங்கள் அலுவலக அளவிலேயே நிராகரித்து, சரியான ஆவணங்களை இணைத்து வழங்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இந்த விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.