சிரஞ்சீவி நடித்து வரும் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் வெங்கடேஷ்.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்றது. தற்போது 3-ம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் வெங்கடேஷ்.
ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளும் வெங்கடேஷ் வருவது போன்று வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அனில் ரவிப்புடி. சிரஞ்சீவி – வெங்கடேஷ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. ‘சங்கராந்திக்கி வஸ்துணாம்’ படத்துக்குப் பிறகு அனில் ரவிப்புடி இயக்கும் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஹைதராபாத்திலேயே நடத்தி முடிக்க படக்குழு திடமிட்டு இருக்கிறது. ‘எஃப் 2’ மற்றும் ‘சங்கராந்திக்கி வஸ்துணாம்’ உள்ளிட்ட படங்களில் வெங்கடேஷ் – அனில் ரவிப்புடி இணைந்து பணிபுரிந்திருக்கிறார்கள். ஆகையால் சிரஞ்சீவி படத்தில் நடிக்க வெங்கடேஷ் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.