மும்பை: ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தின் ஒட்டுமொத்த சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை சுமார் 30 கோடியை நெருங்கி உள்ளது. இதன் மூலம் உலக அளவில் பிரபலமாக உள்ள ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸின் 30.162 கோடி சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை கிட்டத்தட்ட நெருங்கி உள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரின் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை வெறும் 5 கோடி என்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட காலத்தில் அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனை ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்தது. அதன் பலனாக 30 கோடி சப்ஸ்கிரைபர்கள் என்ற எண்ணிக்கையை அந்த தளம் எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனை டிஜிட்டல் வழியாக 65.2 கோடி பார்வைகளையும், தொலைக்காட்சியில் 53.7 கோடி பார்வைகளையும் பெற்று இருந்தது. இதை ஜியோஸ்டார் உறுதி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்தன. இந்த வியூவர்ஷிப் தங்களுக்கு வருவாயாக மாறியுள்ளது என்று ஜியோஸ்டாரின் ஸ்போர்ட்ஸ் மற்றும் லைவ் எக்ஸ்பீரியன்ஸ் பிரிவு தலைமை நிர்வாகி சஞ்சோக் குப்தா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜியோ சினிமா தளம் வழியாக ஐபிஎல் போட்டிகளை பார்த்தவர்களின் எண்ணிக்கை நடப்பு ஐபிஎல் சீசன் உடன் ஒப்பிடும் போது 5.16 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தொலைக்காட்சியே வழியே போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1.6 சதவீதம் குறைந்துள்ளது. பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணி இடையிலான இறுதிப் போட்டியை டிஜிட்டல் வழியாக சுமார் 23.7 கோடி பேரும், தொலைக்காட்சி வழியாக 18.9 கோடி பேரும் பார்த்ததாக ஜியோஸ்டார் கூறியுள்ளது.
கடந்த 2022-ல் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.23,575 கோடி வழங்கி ஐபிஎல் போட்டியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை பெற்றது. இதே தொடருக்கு இந்திய டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸின் ‘வயாகாம் 18’ ரூ.20,500 கோடிக்கு பெற்றிருந்தது. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் கூட்டு நிறுவனங்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.
டிசம்பர் (2024) மாத நிலவரப்படி நெட்ஃப்ளிக்ஸ் தளம் சுமார் 190 நாடுகளில் 30.16 கோடி சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் இடையிலான காலாண்டில் 1.8 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் அந்த தளத்தில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.